Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

19. கிறிஸ்துவின் வருகை

ஏழாம் வாதையும் விசேஷ உயிர்த்தெழுதலும்

ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி உண்டாகும். “பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை” (வெளி. 16:17,18). ஆகாயவிரிவு திறக்கப்படுவதைப்போலவும் மூடிக்கொள்வதைப்போலவும் காணப்பட்டது. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து அவருடைய மகிமை வானங்களினூடாக பிரகாசித்ததுபோலத் தோன்றியது. காற்றில் ஒரு நாணல் அசைவதைப்போல் மலைகள் அசைந்தன. கரடுமுரடான பாறைகள் எல்லாப் பக்கங்களிலும் சிதறிவிழுந்தன… புமி முழுவதும் சமுத்திரத்தின் அலைகளைப்போல மேலே எழுப்பி அடங்கின. அதன் மேற்பரப்பு பிளவுபட்டது. அதன் அஸ்திவாரங்கள் பிளந்து வழி உண்டாக்குவதுபோலத் தோற்றமளித்தன. மலைத்தொடர்கள் பூமிக்குள் புதைந்து கொண்டிருந்தன. ஜனங்கள் குடியிருந்த தீவுகள் காணப்படாமல் போயின. துன்மார்க்கதினால் சோதோமைப்போல் மாறிப்போயிருந்த கடல் துறைமுகங்கள் மூர்க்கமான கடல் அலைகளால் விழுங்கப்பட்டன… ” தாலந்து நிறையான பெரிய கல்மழை” பூமியிலே தங்களது அழிவின் வேலையை செய்துகொண்டிருந்தன (வசனம் 19, 20)… கச 199.1

கல்லறைகள் திறக்கப்பட்டன. “பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து” (தானி. 12:2) எழுந்தார்கள்… மூன்றாம் தூதனுடைய தூதின் விசுவாசத்தில் மரித்தவர்கள் அனைவரும் மகிமையடைந்தவர்களாய் தேவனுடைய பிரமாணத்தைக் கைக்கொண்டவர்களோடு, அவர் செய்யப்போகின்ற சமாதான உடன்படிக்கையைக் கேட்கத்தக்கதாக, தங்கள் கல்லறைகளிலிருந்து எழுந்து வருவார்கள். “அவரைக் குத்தினவர்களும்” (வெளி. 1:7) கிறிஸ்துவினுடைய மரணத்தின் கடுந்துயரங்களைப் பரியாசம் பண்ணினவர்களும் ஏளனம் செய்தவர்களும், அவரது ஜனங்களையும் அவரது சத்தியத்தையும் மிகவும் கோபாவேசத்தோடு எதிர்த்தவர்களும், கிறிஸ்துவின் மகிமையில் அவரைக் காணும்படியாகவும். ஆண்டவருக்கு உண்மையாயும் கீழ்ப்படிந்தும் இருந்தவர்களுக்குக் கிடைக்கும் கனத்தைக் காணும்படியாகவும் எழுந்திருப்பார்கள். — GC 636, 637 (1911). கச 199.2